செய்திகள்
வெங்காய விலை உயர்வை கண்டித்து பலூன்களை பறக்க விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வெங்காய விலை உயர்வை கண்டித்து பலூன்களை பறக்கவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பண்டிகை காலத்தில் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருப்பதை கண்டித்தும், மத்திய- மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்தி அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வடசேரி அண்ணா சிலை சந்திப்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகரக்குழு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி நிறைவுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மனோகர் ஜஸ்டஸ், நாகராஜன், பெஞ்சமின், அசிஸ், கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விலைவாசி உயர்வு விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து கொண்டே இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலூன்களை பறக்க விட்டனர். இந்த நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.