செய்திகள்
உயிரிழந்த கற்பகவல்லி , தர்ஷினி

கோழி இறைச்சி-குளிர்பானத்தை குடித்ததால் தாய்-மகள் உயிரிழந்தனரா?: போலீசார் விசாரணை

Published On 2021-10-13 05:31 GMT   |   Update On 2021-10-13 05:31 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓட்டலில் இருந்து வாங்கி வந்த கோழி இறைச்சி சாப்பிட்டதில் உயிரிழந்த கற்பகவல்லி-தர்ஷினி ஆகியோரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்பன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். லாரி டிரைவர். இவரது மனைவி கற்பகவல்லி (வயது 34). இவர்களுக்கு தர்ஷினி (7) என்ற மகளும், பாண்டி (8) என்ற மகனும் உள்ளனர்.

இளங்கோவன் நேற்று வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உறவினர் வீட்டின் மொட்டை அடிக்கும் விசே‌ஷத்திற்கு கற்பகவல்லி தனது 2 குழந்தைகளுடன் சிப்பிப்பாறைக்கு சென்றார். பின்னர் மீண்டும் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது ஓட்டலில் இருந்து சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளனர்.

அவர்கள் வீட்டிற்கு வந்ததும் அதனை கற்பகவல்லி மற்றும் தர்ஷினி ஆகியோர் சாப்பிட்டு உள்ளனர். சிறுவன் பாண்டி சாப்பிடவில்லை. இந்நிலையில் சாப்பிட்ட பின்னர் தாய்-மகளுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள பெட்டிக்கடையில் இருந்து ரூ. 10 -க்கு குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் வாயிலிருந்து நுரை தள்ளி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கற்பகவல்லியின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் தாய்-மகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இது குறித்து கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஓட்டலில் இருந்து வாங்கி சாப்பிட்ட கோழி இறைச்சியினால் அவர்கள் உயிரிழந்தனரா? அல்லது பெட்டிக்கடையில் வாங்கி குடித்த ரூ. 10 மதிப்பிலான குளிர்பானத்தால் உயரிழந்தனரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த கற்பகவல்லி-தர்ஷினி ஆகியோரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் அறிக்கை கிடைத்த பின்னரே அவர்கள் எதனால் உயிரிழந்தனர் என்பது தெரியவரும்.

Tags:    

Similar News