உள்ளூர் செய்திகள்
மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா உணர்த்தி உள்ளது- பிரதமர் மோடி பேச்சு
அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும், மருத்துவ திட்டம் அடுத்த 5 வருடத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி பேசினார்.
சென்னை:
தமிழகத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
ஒரு மாநிலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் ஒரே சமயத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். உ.பி.யில் இதற்கு முன்பு 9 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்ததே எனது முந்தைய சாதனை. மருத்துவ துறையில் இந்தியாவின் வளர்ச்சியை உலகமே உற்றுநோக்கி வருகிறது. மருத்துவக் கல்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி. மருத்துவ கல்வியானது, மாணவர்களின் விருப்ப படிப்புகளில் ஒன்றாக உள்ளது.
இந்தியாவில் தரமான மருத்துவ வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும். மருத்துவ திட்டம் அடுத்த 5 வருடத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவில் தற்போது 590 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன. நாட்டில் மருத்துவ இடங்கள் 80 சதவீதம் அதிகரித்துள்ளன.
சுகாதாரத்துறை மற்றும் மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா உணர்த்தி உள்ளது. கொரோனா விதிகளை நாம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தொற்றுநோயிலிருந்து கற்றுக்கொண்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் உள்ளடக்கிய, தரமான சுகாதார சேவைகளை உறுதிசெய்ய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். மருத்துவக் கல்வியை காங்கிரஸ் அரசு ஊக்கப்படுத்தவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.