செய்திகள்
கைது

இறுதி ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட நாட்டு வெடியால் சிறுவனின் பார்வை பறிபோனது - 3 பேர் கைது

Published On 2021-11-22 02:54 GMT   |   Update On 2021-11-22 02:54 GMT
சென்னை அருகே இறுதி ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட நாட்டு வெடியால் சிறுவனின் பார்வை பறிபோன சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் அழகுசுந்தரம். இவரது மகன் சந்தோஷ் (வயது 13). 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் சந்தோஷ், கடந்த 15-ந்தேதி, மேற்கு ஜாபர்கான்பேட்டையில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்க்கும் தனது சகோதரி புவனேஷ்வரியை (19) பார்க்க சென்றான். அப்போது அந்த தெருவில் நடந்த ஒரு இறுதி ஊர்வலத்தின்போது சிலர் பேன்சி கடைக்கு முன்பு நாட்டு வெடியை வைத்துள்ளனர்.

அப்போது சிதறிய வெடி சிதறல்கள் கடைக்கு முன் நின்று கொண்டிருந்த சிறுவன் சந்தோசின் இடது கண்ணில்பட்டது. கண்ணில் ரத்தம் வடிந்த நிலையில், சிறுவன் வலியால் துடித்தான். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவனுக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சிறுவனின் சகோதரி புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கென்னடி தெருவை சேர்ந்த விமலா என்பவரின் இறுதி ஊர்வலத்தின் போது, நாட்டு வெடி வெடித்த சண்முகவேலையும் (23) அதனை வாங்கிய குணசேகரன் (24) என்பவரையும், அதை சட்டவிரோதமாக விற்ற செல்வகுமார் (35) என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News