செய்திகள்
கலெக்டர் ஷில்பா

திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் ஷில்பா தகவல்

Published On 2020-10-21 08:32 GMT   |   Update On 2020-10-21 08:32 GMT
இணையதளம் மூலம் நடைபெறும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
நெல்லை:

இணையதளம் மூலம் நடைபெறும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது அமெரிக்க நிறுவனமான கோர்சரா நிறுவனத்துடன் இணைந்து வேலைவாய்ப்பற்ற 50 ஆயிரம் பேருக்கு இணையதளம் மூலம் 11 பிரிவுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமாக பாடங்களில் இலவசமாக பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 80 நாடுகளில் உலகத்தரம் வாய்ந்த திறன்களை வளர்க்கும் இலவச பயிற்சி வகுப்புகளை இணையம் மூலம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் பொறியியல், எந்திர கற்றல், கணிதம், வணிகம், கணினி அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்துதல், மருத்துவம், உயிரியல், சமூகவியல் மற்றும் பிற பாடங்களில் இணையவழியில் வகுப்பு நடத்தி சான்றிதழ் படிப்பு மற்றும் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. இந்த பயிற்சி முடிந்தவுடன் இணையம் வழியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி பெற விரும்புகிறவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், 18 வயது பூர்த்தியாகி வேலைவாய்ப்பற்றவராகவும் இருக்க வேண்டும். பயிற்சி பெற ஆதார் அட்டை, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி ஆகிய விவரங்களுடன் வருகிற 31-ந் தேதிக்குள் tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News