செய்திகள்
பாபநாசம் பகுதியில் தொடர் கனமழையால் 87 வீடுகள் இடிந்து சேதம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் தொடர் மழை கடந்த 5 நாட்களாக பெய்து வருவதால் 87 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன.
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் தொடர் மழை கடந்த 5 நாட்களாக பெய்து வருகிறது. பாபநாசம், ராஜகிரி, பண்டாராவடை ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்துள்ளனர். பாபநாசம் தாலுகாவில் சூலமங்கலம் கிராமத்தில் புதுத்தெருவில் வசித்து வரும் கோமதி என்பவரின் கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. சங்கராம்பேட்டை குடியான தெருவில் கலா என்பவரின் கூரைவீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்தது. பொன்மான் மேய்ந்தநல்லூர் கிராமத்தில் கூரைவீடு இடிந்து சேதம் ஏற்பட்டது.
தேவராயன்பேட்டை கிராமத்தில் வடக்கு குடியான தெருவில் கார்த்திகேயன் என்பவரது கூரைவீடு இடிந்து விழுந்தது. வீடு இடிந்த இடங்களை கும்பகோணம் ஆர்.டி.ஓ. வீராசாமி பார்வையிட்டார். பாபநாசம் தாலுக்காவில் தொடர் கனமழை காரணமாக இதுவரை 74 குடிசை வீடுகளும், 13 ஓட்டு வீடுகளும் இடிந்து விழுந்துள்ளதாகவும், 3 பசு மாடு, 1 காளை மாடு, 1 கன்று ஒன்றும் மேலும் மனித உயிரிழப்பு ஒன்று இறந்துள்ளதாகவும் தாசில்தார் கண்ணன் தெரிவித்தார்.
மேலும் குடிசை வீடு இடிந்து முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், பகுதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 100-ம் வங்கி கணக்கு மூலம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.