செய்திகள்
புகார்

வரதட்சணை கேட்டு காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண்ணை அடித்துக்கொன்றதாக புகார்

Published On 2020-11-17 13:47 GMT   |   Update On 2020-11-17 13:47 GMT
திருவோணம் அருகே வரதட்சணை கேட்டு காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண்ணை அடித்துக்கொன்றதாக 2 குழந்தைகளுடன் உறவினர்கள், கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வேலி வடபாதி வடக்குத்தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் தனது உறவினர்கள் மற்றும் 2 கைக்குழந்தையுடன், கொட்டும் மழையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் கலெக்டர் கோவிந்தராவிடம் ஒரு மனு கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

எனது மகள் திவ்யா(வயது 22), பி.ஏ. படித்துள்ளார். இவர், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றபோது கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு ஒரத்தநாட்டை அடுத்த வெட்டுவாக்கோட்டையை சேர்ந்த அஜீத்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

திருமணம் ஆனது முதல் எனது மகளை, அஜீத்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். மேலும் அடித்தும் துன்புறுத்தினர். இதுகுறித்து அடிக்கடி எனது மகள், எங்களிடம் கூறுவார்.

இந்த நிலையில் எனது மகள் தூக்குப்போட்டு இறந்ததாக கூறினர். அவருடைய சாவில் சந்தேகம் உள்ளது. வரதட்சணை கேட்டு அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடுவதாக நாங்கள் போலீசில் புகார் செய்தோம். ஆர்.டி.ஓ. விசாரணையிலும் இது குறித்து தெரிவித்தோம். ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எனது மகள் தற்கொலை செய்ததாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

எனவே எனது மகளை அடித்து கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News