செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

புதுவையில் இலவச அரிசிக்கு கவர்னர் மறுப்பு

Published On 2019-09-08 10:48 GMT   |   Update On 2019-09-08 10:48 GMT
புதுவையில் ரேசன் கடைகளில் இலவச அரிசி வழங்க கவர்னர் கிரண்பேடி மறுத்து விட்டார்.

புதுச்சேரி:

புதுவையில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பணத்துக்கு பதிலாக அரிசி வழங்க வேண்டுமென சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பணத்துக்கு பதிலாக இலவச அரிசி வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் கிரண்பேடியை நேற்று ராஜ்நிவாசில் கவர்னர் கிரண்பேடியை சந்தித்து சட்டசபை தீர்மானத்தை கொடுத்தனர்.

பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை கவர்னர் கிரண்பேடி ஏற்க மறுத்தார். இதனால் ஆவேசம் அடைந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜ்நிவாசில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 


 

இது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தேர்வு செய்யப்பட்ட அரசின் பிரதிநிதிகள் என்னை அலுவலகத்தில் வந்து சந்தித்தனர். அப்போது தலைமை செயலர் அஸ்வனி குமார், கவர்னரின் ஆலோசகர் தேவநீதிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது ஏற்கனவே பின்பற்றிய நடைமுறைப்படி சிவப்பு ரேசன் அட்டைக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் ரேசன் அட்டைக்கு 10 கிலோ அரிசியும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மேலும் அரசே டெண்டர் மூலம் பல்வேறு ஒப்பந்ததாரர்களிடம் அரிசியை நேரடியாக கொள்முதல் செய்து வினியோகம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் மோசடியை தடுக்கும் வகையில் அரிசிக்கு பதிலாக பணத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

பொதுமக்களுக்கு காலத்தோடு பணம் போய் சேருவதோடு அளவு மற்றும் விலைக்கு ஏற்றவாறு பொதுமக்களே தரமான அரிசியை வாங்கிக் கொள்வார்கள் என கவர்னர் மாளிகை கருதுகிறது.

இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பான கோப்பினை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

எனவே, இறுதி முடிவு வரும் வரை தற்போதைய நடைமுறைப்படி அரிசிக்கான பணத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என கூறினேன்.

இலவச அரிசி வழங்கப்படுவதற்கு செலவிடப்படும் ரூ.160 கோடி புதுவை சந்தையில் செலவிடப்பட வேண்டும். இது, மாநில வர்த்தகர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தை ஏற்கவில்லை எனக்கூறுவது தவறானது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News