செய்திகள்
பருவமழை பாதுகாப்பு நடவடிக்கை - அதிகாரிகள் ஆலோசனை
அனைத்து கழிவு நீர் கால்வாயகள், நீர்வழிப்பாதைகள் அனைத்தையும் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர்:
பருவ மழை எதிர்பார்க்கப்படும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது. செயற்பொறியாளர் முகமது சபியுல்லா, நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார், மண்டல உதவி கமிஷனர்கள் சுப்ரமணியம், செல்வநாயகம், வாசுகுமார், கண்ணன், வருவாய் மற்றும் சுகாதார பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அனைத்து கழிவு நீர் கால்வாய்கள், நீர்வழிப்பாதைகள் அனைத்தும் தூர்வாரி சுத்தம் செய்தல், இதற்காக அனைத்து வார்டுகளையும் 6 மண்டலங்களாகப் பிரித்து, உரிய தூய்மைப் பணியாளர்கள் நியமித்து தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும். பணிகளை மேற்பார்வையிட பொறுப்பாளர் நியமிக்க வேண்டும்.
மழை நீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும். இதற்காக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும்.
உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மேற்கொண்டு கவனமாக பணியாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.