செய்திகள்
உ.பி.: பள்ளி மாணவிகளான இரு சகோதரிகளின் பிணங்கள் ஆற்றங்கரையில் கண்டெடுப்பு
உத்தர பிரதேசத்தில் வகுப்பு இடைவேளையின்போது, சாமி கும்பிடுவதாக கூறிச்சென்ற சகோதரிகள், கைகள் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையில் இன்று பிணங்களாக ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டனர்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலம் பிலிபிட் மாவட்டத்தின் கோட்வாலி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரா. இவரது மகள்கள் ஷிவாங்கி(16), அஞ்சலி(14). இருவரும் சக்ரா பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.
நேற்று காலை இருவரும் பள்ளி சென்றனர். இடைவேளையின் போது, சகோதரிகள் தங்களது உறவினருக்கு போன் செய்து சாமி கும்பிடப் போவதாக தெரிவித்தனர். ஆனால், மாலையில் இருவரும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, அவர்களது பெற்றோர் கோட்வாலி போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களது உறவினர் வேறோரு பகுதியில் சகோதரிகளை பார்த்ததாக கூற, பெற்றோர் அங்கு தேடிச் சென்றனர்.
இந்நிலையில், சாங்கிப்பூர் பகுதியில் உள்ள சாய் ஆற்றின் அருகில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இரு சகோதரிகளின் பிணங்களை இன்று போலீசார் கண்டெடுத்தனர். இதுதொடர்பாக, கோட்வாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாமி கும்பிடுவதாக கூறிச்சென்ற சகோதரிகள் பிணங்களாக கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.