செய்திகள்
கலவரத்தை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குடிபோதையில் உள்ள 2 பேர் சாலையில் செல்வோரை நிறுத்தி, அவர்களின் சாதியை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி அவதூறு செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
பல்லடம்:
பல்லடம் காவல் நிலையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் வக்கீல் ஈசன் மற்றும் கொ.ம.தே.க. நிர்வாகிகள் பெரியசாமி, ஆறுக்குட்டி, வீரக்குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் ஒரு புகார் மனு அளித்தனர்.
மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி வந்தது. அதில் குடிபோதையில் உள்ள 2 பேர் சாலையில் செல்வோரை நிறுத்தி, அவர்களின் சாதியை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி அவதூறு செய்கின்றனர்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து விசாரித்தபோது அவர்கள் கோவை மாவட்டம் சூலூர் வட்டம் ஜெ.கிருஷ்ணபுரத்தை சேர்ந்த கருப்பன் மகன் சின்ராசு மற்றும் வினோத் உள்ளிட்ட 10 பேர் என்பதும் , கடந்த 29-ந்தேதி தாளக்கரை ஆதிதிராவிடர் காலனி அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதும் தெரியவந்தது.
குறிப்பிட்ட அந்த நபர்கள் ஒன்று கூடி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் 2 சமூகங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் நோக்கத்தோடு செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.