செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் 75 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடலூர்:
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்திலும் கோர தாண்டவம் ஆடியது. இதனால் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தினசரி 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு மாநில அரசுடன், மாவட்ட நிர்வாகம் இணைந்து எடுத்து தீவிர நடவடிக்கைகளால் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. இதனால் கடந்த மாதம் தொடக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கை தாண்டாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 75 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு திரும்பி வந்த 4 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 28 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 43 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 880 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.