சேத்துப்பட்டு வணிக வளாகத்தில் தனியார் நிறுவனத்தில் ரூ.72 லட்சம் கொள்ளை
சென்னை:
சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டில் உள்ள 7 மாடிகளை கொண்ட வணிக வளாகத்தில் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு 4-வது மாடியில் வாகனங்களுக்கான பேட்டரி உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலை செய்தவர்கள் பணி முடிந்து வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் அலுவலக ஊழியர் விக்டர் மறுநாள் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் நேரில் வந்து பார்த்தனர். அப்போது லாக்கரில் இருந்த ரூ.72 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சேத்துப்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்தது எப்படி? என்பது பற்றி விசாரணை நடத்தி வரும் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.