செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 256 கன அடியாக அதிகரிப்பு

Published On 2021-07-17 10:00 GMT   |   Update On 2021-07-17 10:00 GMT
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
மேட்டூர்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜாசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து அந்த அணைகளில் இருந்து மீண்டும் உபரி நீர் காவிரியில் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 14 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிருஷ்ணராஜாசாகர் அணையில் இருந்து 1500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 15 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கலில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று ஒகேனக்கலில் 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 411 கன அடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 3 ஆயிரத்து 256 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமக சரிந்து வருகிறது.

நேற்று 72.16 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 71.97 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News