ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை
ராமேசுவரம்:
ராமேசுவரம் பகுதியில் இருந்து 300 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனே இங்கிருந்து செல்லுங்கள் என்று எச்சரித்தனர்.
மீனவர்கள் தங்கள் படகுகளை கரைக்கு திருப்ப முயன்றபோது இலங்கை கடற்படையினர் சில படகுகளுக்குள் புகுந்து மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தினர். தாங்கள் வந்த படகை மீனவர்களின் படகுகளில் மீது மோதி சேதப்படுத்தினர்.
உயிர் பிழைத்தால் போதும் என்று கருதிய மீனவர்கள் படகுகளில் வேகமாக கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் தாங்கள் மீன்பிடிக்க முடியவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர்மல்க கூறினர்.