செய்திகள்
தற்கொலை

குடியாத்தத்தில் திருமணமான 7 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2021-09-15 08:27 GMT   |   Update On 2021-09-15 08:27 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திருமணம் ஆன 7 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம்:

குடியாத்தம் டவுன் பெரியார் நகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எழிலரசன்.

இவரது மனைவி நளினி. இருவரும் கூலித்தொழிலாளர்கள். இவரது மகள் அபிநயா என்கிற அன்பரசி (வயது 21). இவருக்கும் கே.வி.குப்பம் அடுத்த மேல் காவனூர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் ராமராஜன் என்பவருக்கும் கடந்த புதன்கிழமை கே.வி.குப்பத்தில் திருமணம் நடந்தது. ராமராஜன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள பார்மசியில் வேலை செய்து வருகிறார்.

மறு விருந்திற்காக 2 நாட்களுக்கு முன் புதுமண தம்பதிகள் குடியாத்தத்தில் உள்ள அபிநயா வீட்டிற்கு வந்தனர். இன்று காலை சுமார் 9 மணி அளவில் வீட்டில் அறையின் கதவை தாழிட்டுக் கொண்டு சேலையால் அபிநயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக் கண்ட உறவினர்கள் கணவர் மற்றும் பெற்றோர் உடனடியாக கதவை உடைத்து அபிநயாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அபிநயா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 நாட்களே ஆவதால் குடியாத்தம் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News