செய்திகள்
விபத்து பலி

ராமநாதபுரம் அருகே கார்-பைக் மோதல்: பெண் உள்பட 2 பேர் பலி

Published On 2021-07-17 09:42 GMT   |   Update On 2021-07-17 09:42 GMT
ராமநாதபுரம் அருகே விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்:

ராமேசுவரம் அருகே உள்ள மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து ரமேஷ். இவரது மனைவி கஜேந்தினி (வயது40).

இவர் வாலாந்தரவை அருகே கீரிப்புள்ளை கிராமத்தில் உள்ள உறவினர் பத்மா வீட்டிற்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக தனது உறவினர் கருப்பசாமி (48) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

அங்கு உறவினர் பத்மாவை சந்தித்து விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டார். அப்போது பத்மாவின் மகன் ஆதிகேசவன் (13) அவர்களுடன் ராமேசுவரம் வருவதாக கூறினான். இதனால் அவனையும் அழைத்துக் கொண்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

உச்சிப்புளியை அடுத்துள்ள பிரப்பன் வலசை பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கஜேந்தினி உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கஜேந்தினி, ஆதிகேசவன் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கஜேந்தினி இறந்தார்.

விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் மதுரையைச் சேர்ந்தது என தெரியவந்தது.

மதுரையைச் சேர்ந்த வாசுதேவன் (55) என்பவர் குடும்பத்தினருடன் ராமேசுவரம் கோவிலில் தரிசனத்தை முடித்து விட்டு திரும்பிய போது தான் இந்த விபத்து ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News