செய்திகள்
பீகாரில் மின்னல் தாக்கி 4 பேர் பலி
பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கு வசித்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில அரசின் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் பஹல்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. இந்த மின்னல் தாக்குதலில் சிக்கி மூன்று பெண்கள் உள்பட 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்ட விதிப்படி தலா 4 லட்சம் இழப்பிடாக வழங்கப்படும் என மாவட்ட கூடுதல் ஆட்சியர் ராஜேஷ் ஜா ராஜா தெரிவித்துள்ளார்.
பீகாரில் மேலும் 48 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.