செய்திகள்
கோப்புபடம்

திருச்சி அருகே கோவில் திருவிழாவில் பிளஸ்-2 மாணவர் குத்திக்கொலை - காதல் தகராறில் நடந்ததா? என விசாரணை

Published On 2021-04-04 07:07 GMT   |   Update On 2021-04-04 07:07 GMT
திருச்சி அருகே கோவில் திருவிழாவில் பிளஸ்-2 மாணவர்கள் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொட்டியம்:

ஈரோட்டை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் குமார் (வயது 18). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்க ஆண்டுதோறும் வந்து செல்வது வழக்கம்.

இதேபோல் குமார், இந்த ஆண்டும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் தொட்டியம் அருகேயுள்ள கொத்தவம்பட்டியில் உள்ள உறவினர் வீட் டுக்கு வந்திருந்தார்.

திருவிழாவையொட்டி நேற்று இரவு கோவில் அருகே உள்ள திடலில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை பார்க்க குமார் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

அப்போது தெற்கு ரத வீதியில் குமார் சென்ற போது, திடீரென்று ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்தது. இதனைப்பார்த்த அதிர்ச்சியடைந்த குமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் குமாரை துரத்திச்சென்று கீழே தள்ளி மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றது.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் குமார் பரிதாபமாக உயிரி ழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று கொலையுண்ட குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

மேலும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரமானந்தன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தியதோடு, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சி பதிவுகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பந்தமாக சந்தேகத்துடன் அப்பகுதியை சேர்ந்த 5 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமாரை எதற்காக கும்பல் கொலை செய்தது? முன்விரோதமா? அல்லது காதல் தகராறா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவில் திருவிழாவில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Tags:    

Similar News