ஆன்மிகம்
காளிப்பட்டி கந்தசாமி கோவில்- நாமக்கல்

காளிப்பட்டி கந்தசாமி கோவில்- நாமக்கல்

Published On 2021-01-30 07:01 GMT   |   Update On 2021-01-30 07:01 GMT
சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் இருக்கிறது நூற்றாண்டு பழமை கொண்ட காளிப்பட்டி கந்தசாமி கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் இருக்கிறது நூற்றாண்டு பழமை கொண்ட காளிப்பட்டி கந்தசாமி கோயில். தென்றல் வீசும் கிராமங்கள்,  பசுமை போர்த்திய வயல்வெளிகள், விண்ணை தொடும் மலைகள் நிறைந்த பகுதியில் கண்ணுக்கு விருந்தாய், கம்பீரமாய் காட்சியளிக்கிறது கந்தசாமி ேகாயில். தைப்பூசம், பங்குனி உத்திரம் என்று முருகனுக்கு உகந்த நாட்கள் மட்டுமல்ல, அனைத்து நாட்களிலும் மக்கள் கூட்டம் களை கட்டும். இங்கு நடக்கும் வேண்டுதல்களும், நேர்த்திக்கடன்களும் வியப்புக்குரியவை என்றால் மிகையல்ல. கொடிய பாம்புகள் தீண்டி, விஷம் ஏறியவர்களை கோயில் மண்டபத்திற்கு கொண்டு வருகின்றனர் மக்கள். பூசாரி அவர்களுக்கு தீர்த்தம் வழங்கி திருநீறு பூசுகிறார்.

சிறிது ேநரத்திலேயே விஷம் இறங்கி விடுகிறது. பாம்பு தீண்டியவர் எந்த பதற்றமும் இல்லாமல் எதார்த்தமாக எழுந்து செல்கிறார். இது தான் ‘‘தோகைமயில் ஏறி வரும் சேவற்கொடியோன், சுந்தர திருநீறு பூசிவரும் ஆறுமுகன், காவடிகள் ஏந்தும் பக்தர்களின் மனக்குமுறை தீர்க்கும் சிவபாலன், செல்வமும், புகழும் அள்ளித்தரும் பரம்பொருள், எங்கள் காவல் தெய்வம் காளிப்பட்டி கந்தசாமியின் மகிமை’’ என்று கூறி சிலிர்க்கின்றனர் பக்தர்கள். முன்னொரு காலத்தில் முருகன் மீது மிகுந்த பற்றுக் கொண்ட பக்தர் ஒருவர் இங்கு வசித்தார். அவர் ஒவ்வொரு தைப்பூசத்திற்கும் கடும் விரதம் இருந்து காடு, மேடுகளை தாண்டி, விஷ ஜந்துக்களை பொருட்படுத்தாமல் கால்நடையாக பழனிக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம்.

இதுபோல் ஒரு வருடம் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் விரதம் இருந்து பழனிக்கு செல்ல ஆயத்தமானார். அப்போது அவரது கனவில் ேதான்றிய முருகன், ‘இனி என்னைத்தேடி நீ பழனிக்கு வர வேண்டாம். நீயிருக்கும் இடத்திலேயே நானும் குடியிருக்க விரும்புகிறேன். எனவே எனக்கு நீ வசிக்கும் பகுதியில் ஒரு கோயில் கட்டு’’ என்று கூறிவிட்டு மறைந்துள்ளார். அதன்படி கட்டப்பட்டதே காளிப்பட்டி கந்தசாமி கோயில் என்பது தலவரலாறு. பழனி முருகனே இங்கு, கந்தசாமியாக அமர்ந்து அருள்பாலிக்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வைகாசி விசாகநாளில் பாலாபிஷேகம் செய்து, மனமுருக கந்தசாமியை வழிபட்டால் கல்யாண யோகம் கூடும். பிள்ளைப்பேறு கிடைக்கும்.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டம், உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல், எதிரிகளால் வரும் தீமை, கிரகங்களால் வரும் தோஷம் என்று அனைத்தையும் தகர்த்து அருள்பாலிக்கும் ஆபத் பாந்தவன் இந்த கந்தசாமி. வைகாசி விசாகத்தின்போது உற்சவர் வீதி உலா வருவது வழக்கம். அப்போது கந்தசாமியை வழிபட்டால் கவலைகளின் சுவடும் காணாமல் போகும். வீண்பயம், மனக்குழப்பம் நிறைந்த நேரத்தில் கந்தசாமியை பூஜித்து, இங்குள்ள இடும்பன் கோயில் கருப்பு மையை நெற்றியில் இட்டால், அனைத்தும் காற்றில் கலந்து விடும் என்பது ஆண்டாண்டு காலமாய் தொடரும் ஐதீகம்.

ஆண்டுதோறும் இங்கு நடக்கும் தைப்பூச தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. அப்போது சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும் அலையென பக்தர் கூட்டம் ஆர்ப்பரிக்கும். அன்றைய தினம் பொங்கல் வழிபாடு, உருளுதண்டம், காவடியாட்டம், கரகாட்டம், குறவன் குறத்தி, கும்மிப்பாட்டு என்று திரும்பிய திசையெல்லாம் தமிழ் மண்ணின் பாரம்பரியங்கள் கலந்த பக்தி வாசம் வீசும். மாட்டுச்சந்தை, சிறப்பு நீதிமன்றம் போன்றவை கோயில் வளாகத்திற்கு எதிரில் நடப்பதும் வேறு எங்கும் காணமுடியாத ஒன்று.
Tags:    

Similar News