உள்ளூர் செய்திகள்
மதுரையில் ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது
மதுரையில் லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 டன் எடையுள்ள ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
மதுரை புறநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மண்டல குடிமைப்பொருள் அமலாக்கத்துறை போலீசுக்கு தகவல் வந்தது.
இதன் அடிப்படையில் போலீசார் கோவில்பட்டி அருகே வாகன சோதனை நடத்தினர். அங்கு ஒரு லாரி வந்தது. அதில் இருந்த சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில், 130 சாக்குகளில் 5 ஆயிரத்து 350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் 8 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மதுரை மண்டல குடிமைப்பொருள் அமலாக்கப்பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்திய கம்பூர் சுரேஷ் (47), சேவுகன் (50), பிரபாகரன் (36), சதீஷ் (31), ஒ.கோவில்பட்டி சுந்தர பாண்டி (36), கருங்காலக்குடி சபீர்அலி ஆகிய 6 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய ரேஷன் அரிசி உரிமையாளர் கண்ணன், லாரி டிரைவர் தெய்வேந்தி ரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
கடத்தல்காரர்கள் மேலூர் பகுதியில் ரேஷன் அரிசிகளை சேகரித்து பதுக்கி வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மதுரை மண்டல ரேசன் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.