செய்திகள்
சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் - கமல் டுவிட்
டெல்லி வன்முறை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது:-
சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால்தான் முதல் ஆளாக நிற்பேன் என்று கூறியிருந்தேன். உளவுத்துறையின் தோல்வி தான் டெல்லி வன்முறைக்கு காரணம். மத்திய அரசின் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறாது என நினைக்கிறேன். சில கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததற்கு கமல் டுவிட் செய்துள்ளார். அதில், சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க, இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை வருக வாழ்த்துகள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.