செய்திகள்
இம்ரான் தாஹிர்

10 வருடங்கள் நாட்டுக்காக விளையாடியதை மறந்துட்டாங்க -இம்ரான் தாஹிர் ஆவேசம்

Published On 2021-09-11 09:32 GMT   |   Update On 2021-09-11 09:32 GMT
நான் தேவைப்பட்டால் 50 வயது வரைகூட விளையாடத் தயார் என தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீர் கூறினார் .

உலகக் கோப்பை டி20 தொடர் வருகிற அக்டோபர் 17 முதல்  நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த  தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், உலகக் கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.  சமீபத்தில், இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. ஆனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் ஃபாஃப் டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரிஸ் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக,  இம்ரான் தாஹிர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் கூறுகையில் "உலகக் கோப்பையில் விளையாட நான் தயாராக இருந்தேன். ஆனால்,  அணியிலிருந்து என்னை நீக்கியது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கின்றது.  கடந்த ஆண்டு கிரேம் ஸ்மித் என்னை தொடர்பு கொண்டு, 'உலகக் கோப்பையில் நீங்கள் விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.  அனைத்து கிரிக்கெட் லீக்குகளிலும் உங்கள் செயல்திறனை பார்த்ததால் தான் உங்களை தொடர்பு கொண்டு உலகக் கோப்பையில் விளையாட அழைக்கிறேன். மேலும் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ஃபாஃப் டூ ப்ளெசிஸ் போன்றோருடனும் பேசப் போகிறேன்’ என கூறினார். ஆனால், அதன் பின்னர் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

நான் 10 வருடங்கள் நாட்டுக்காக விளையாடினேன். இப்போது நான் அவர்களுக்கு பயனற்றவன் ஆகிவிட்டேன். என்னை நீக்கியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நாட்டிற்காக ஒரு உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று பல கனவுகளுடன் இருந்தேன். இதுவரை எனக்கு அளித்த வாய்ப்பிற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால், நான் ஓய்வு பெறத் திட்டமிடவில்லை. தேவைப்பட்டால் 50 வயது வரைகூட விளையாடத் தயார்" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
Tags:    

Similar News