செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்- ஐகோர்ட்

Published On 2021-06-22 07:46 GMT   |   Update On 2021-06-22 07:46 GMT
கொரோனா 2-வது அலையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம் எனவும், ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை:

கொரோனா 2-வது அலை பரவல் தீவிரமடைந்த போது, ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசி வினியோகம் குறித்து சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், மாநிலத்தில் 1.20 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் ஏராளமான படுக்கைகள் காலியாக உள்ளன எனவும், தடுப்பூசி போடும் பணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், 3-வது அலை தாக்கும் அபாயம் இருப்பதாக கூறுவதற்கு எந்த அறிவியல் பூர்வ அடிப்படையும் இல்லை. இருந்தாலும், எதிர்காலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் போது, அதை எதிர்கொள்வதற்காக, 2-வது அலையை சமாளிக்க ஏற்படுத்தப்பட்ட வசதிகளை அகற்றாமல் தொடர வேண்டும் என உத்தரவிட்டனர்.


மேலும், “ஆக்சிஜன் உற்பத்தியையும் தொடர வேண்டும். தடுப்பூசி மருந்து வினியோகத்தை துரிதப்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News