செய்திகள்
மடத்துக்குளம் பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ஒரு ஏக்கர் நடவு செய்ய நான்கு கிலோ வரை விதை கம்பு தேவைப்படுகிறது. விளைநிலம் செம்மைப்படுத்துவது தொடங்கி அறுவடை வரை ரூ.14,000 வரை செலவாகிறது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் பகுதியில் அமராவதி அணையின் நீர் இருப்பை பயன்படுத்தி ஆண்டு தோறும் சம்பா, குறுவை என இரு பருவங்களில் சாகுபடி நடக்கிறது. பழைய ஆயக்கட்டு பகுதியில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவை பிரதான பயிராக உள்ளன.
புதிய ஆயக்கட்டு பகுதியில் மக்காச்சோளம் மற்றும் பல வகையான சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கம்பு பயிர் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தற்போது மடத்துக்குளம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கம்பு சாகுபடி நடந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
ஒரு ஏக்கர் நடவு செய்ய நான்கு கிலோ வரை விதை கம்பு தேவைப்படுகிறது. விளைநிலம் செம்மைப்படுத்துவது தொடங்கி அறுவடை வரை ரூ.14,000 வரை செலவாகிறது. சீராக பராமரித்து வளர்க்கும் போது 100 நாட்களில் அறுவடை செய்யலாம்.
ஆரோக்கியமான விளைச்சல் இருந்தால் 1,200 முதல் 1,500 கிலோ வரை மகசூல் கிடைக்கும். பாசன நீர் பற்றாக்குறை மற்றும் கிணற்றுப்பாசனம் உள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் பயிராக கம்பு உள்ளது.
இதனால் பல இடங்களில் கம்பு பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். இதோடு சிறுதானிய உற்பத்தி பெருக்கத்திற்கு இது ஒரு முயற்சியாகவும் உள்ளது என்றனர்.