செய்திகள்
கைது

பிரபல ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது

Published On 2021-10-08 08:20 GMT   |   Update On 2021-10-08 08:20 GMT
லாலாபேட்டை அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாலாபேட்டை:

கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த கருப்பத்தூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 52). பிரபல ரவுடியான இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் தனது தோட்டத்திற்கு சென்றபோது மர்ம ஆசாமிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் கோபாலகிருஷ்ணன் கொலை வழக்கு தொடர்பாக 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

தேவேந்திர குல மக்கள் கட்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கும், அதே கட்சியை சேர்ந்த கருப்பத்தூரை சேர்ந்த ராஜா என்கிற ராஜபாண்டியன் (33), வயலூரை சேர்ந்த சரவணகுமார் (25) ஆகியோருக்கும் இடையே பேனர் வைப்பது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து உள்ளது.

இதையடுத்து, கோபாலகிருஷ்ணனை கொலை செய்வதற்காக அவரை கண்காணித்து தகவல் அளிக்க கம்மநல்லூரை சேர்ந்த சுரேஷ் (36), கருப்பத்தூர் தெற்குதெருவை சேர்ந்த வினோத்குமார் (36) ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தோட்டத்தில் தனியாக நின்று கொண்டிருந்த கோபாலகிருஷ்ணனை ராஜபாண்டியன், சரவணகுமார் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த தேவேந்திர குல மக்கள் கட்சியை சேர்ந்த கரூர் திருக்காம்புலியூர் நந்தகுமார் (33), நாமக்கல் மாவட்டம் வரகூர் மனோஜ் (25), திருச்சி மாவட்டம் தொட்டியம் கார்த்திக் (36) ஆகியோர் உதவி செய்து உள்ளனர்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை விரைவில் கைது செய்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News