செய்திகள்
கைது

வேப்பந்தட்டை அருகே ஆடுகள் திருடிய 2 வாலிபர்கள் கைது

Published On 2020-10-17 10:20 GMT   |   Update On 2020-10-17 10:20 GMT
வேப்பந்தட்டை அருகே ஆடுகள் திருடி, சந்தையில் விற்க முயன்றதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கோரையாறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன், பொன்னுசாமி. விவசாயிகள். இவர்களுக்கு சொந்தமான 4 ஆடுகளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து அவர்கள் 2 பேரும் அரும்பாவூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடிய நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில், திருட்டு ஆடுகளை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அ.மேட்டூரை சேர்ந்த மதிராஜ் (வயது 23), சத்யபிரகாஷ் (19) ஆகியோர் விற்பதற்காக கொண்டு வந்த ஆடுகள் கோரையாறு கிராமத்தில் திருடப்பட்ட ஆடுகள் என்பது, தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ஆடுகள் திருடியதாக 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வெள்ளாடுகளை மீட்டு, இதுபோன்று வேறு எங்காவது அவர்கள் ஆடுகளைத் திருடி உள்ளார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News