செய்திகள்
தொல்.திருமாவளவன்

ரஜினிகாந்த் நல்ல முடிவு எடுத்திருக்கிறார்- தொல்.திருமாவளவன் பேட்டி

Published On 2020-10-30 21:26 GMT   |   Update On 2020-10-30 21:26 GMT
நடிகர் ரஜினிகாந்த் நல்ல முடிவை எடுத்திருக்கிறார் என்றும், சாதி, மத அரசியலில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகாமல் நலத்தோடு அவர் இருக்க வேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கூறினார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு சென்று மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

பா.ஜ.க. சார்பில் நடத்தப்படவுள்ள வெற்றிவேல் யாத்திரை தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது என்ற ஐயம் எழுந்துள்ளது. எனவே இந்த யாத்திரைக்கு காவல்துறை அனுமதி அளிக்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பா.ஜ.க.வும் அதன் ஆதரவு அமைப்புகளும், மேற்கொண்டுள்ளன. எனவே அரசியல் ஆதாயத்துக்காக மக்களை பிளவுபடுத்தி மோதலை உருவாக்கும் நோக்கத்தோடு திட்டமிடப்பட்டுள்ள, இந்த யாத்திரைக்கு போலீஸ் அனுமதி வழங்க வேண்டாம்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

7.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன். அதோடு நீதிபதி கலையரசன் அறிக்கையின்படி, இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக அதிகரித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் ரஜினிகாந்த் நல்ல முடிவை எடுத்திருக்கிறார் என்றும், அவர் உடல் நலத்தோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சாதி, மத அரசியலில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகாமல் நலத்தோடும், வளத்தோடும் அவர் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News