செய்திகள்
மூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு
ஐதராபாத்தில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
ஐதராபாத்:
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் மூன்று 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்து, தடுப்பு மருந்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டார். அதன்படி இன்று காலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார்.
இந்த நிறுவனம் தயாரிக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் 2-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. அதன் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் பிரதமர் மோடி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் சென்றார். ஹக்கிம்பேட் விமானப்படை நிலையத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து ஜெனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு சென்றார்.
இந்த நிறுவனம் தயாரித்து வரும் ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி, 3-வது கட்ட பரிசோதனையில் உள்ளது. அதன் முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். பாரத் பயோடெக் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.