இந்தியா
பொதுக்கூட்டம் (கோப்பு படம்)

தேர்தல் நடக்கும் மாநிலங்களில் ஜனவரி 15ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்த தடை

Published On 2022-01-08 12:01 GMT   |   Update On 2022-01-08 13:40 GMT
வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி சான்றிதழை பெற வேட்பாளருடன் 2 நபர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தலைமை தேர்தல் ஆணையர் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று வெளியிட்டார். 

மேலும்,  கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, தேர்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறியதாவது:-

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் ஜனவரி 15ஆம் தேதி வரை தேர்தல் பொதுக்கூட்டங்கள்,  ரோட்ஷோக்கள் மற்றும் தெருமுனை பிரசார கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் ஜனவரி 15ஆம் தேதி கொரோனா பாதிப்புகள் மற்றும் கள நிலவரத்தை மதிப்பாய்வு செய்து, பொதுக்கூட்டங்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யும்.

கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால், அந்த கட்சிகளின் பொதுக்கூட்டங்களை தடை செய்ய தேர்தல் ஆணையம் தயங்காது.

வீடுவீடாக பிரசாரம் செய்ய 5 நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது. பிரசார கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களுக்கு கட்சிகள் சார்பில் முக கவசங்கள், சானிடைசர்கள் வழங்கவேண்டும். தேர்தலுக்கு பிந்தைய வெற்றி கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெற்றி சான்றிதழை பெற வேட்பாளருடன் 2 நபர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News