பொள்ளாச்சியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கோவை:
பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32). தொழிலாளி. இவரது மனைவி தேவி (28). இவர்களுக்கு 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் தேவி கணவரை பிரிந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஜமீன்ஊத்துக்குளி பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
அங்கு கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். இந்தநிலையில் தேவி கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
தீ உடல் முழுவதும் பரவியதும் தேவி வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.