செய்திகள்
நீரில் மூழ்கி பலி

கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2021-09-13 06:10 GMT   |   Update On 2021-09-13 06:10 GMT
கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பாளையம்:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பச்சமலை தென்றல் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் பெயிண்டர். இவரது மனைவி நதியா. இவர்களுக்கு புவனேஸ்வரி, ஸ்ரீமதி என்ற 2 மகள்களும், விஜய் (8) என்ற 3-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.

நேற்று மதியம் விக்னேஷ் தனது மனைவி நதியா மற்றும் மகன் விஜய் ஆகியோருடன் கள்ளிப்பட்டியில் உள்ள பவானி ஆற்றுக்கு துணி துவைக்க சென்றார். விக்னேஷ் மற்றும் நதியா இருவரும் துணிகளை துவைத்துக்கொண்டு இருந்த போது ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்த சிறுவன் விஜய் திடீரென தண்ணீரில் மூழ்கினான்.

இதை கண்ட பெற்றோர் தண்ணீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயற்சித்தனர். தற்போது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பங்களாபுதூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஆற்றில் வெள்ளம் அதிகளவில் இருக்கவே அவர்களாலும் காப்பாற்ற முடியவில்லை.

இதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு சிறுவனை தேடும் பணி நடைபெற்றது. சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் விஜய் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

விஜய்யின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News