உள்ளூர் செய்திகள்
தீ விபத்து

வீட்டில் தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

Published On 2022-05-05 12:25 GMT   |   Update On 2022-05-05 12:25 GMT
சங்கராபுரம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம், புதுபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அப்பாதுரை. இவரது மனைவி சித்ரா. இவர் இரவு சமையல் செய்து விட்டு கியாஸ் அடுப்பை மூடாமல் மறந்து விட்டு தூங்க சென்றுள்ளார். இரவு முழுவதும் சிலிண்டரில் இருந்த கியாஸ் கசிந்து வீடு முழுக்க பரவி உள்ளது.

இதனை அறியாத சித்ரா காலை பால் காய்ச்ச கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென கூரை வீடு தீ பிடித்து எரிய தொடங்கியது. சித்ரா அதிர்ச்சிடையந்து வெளியே ஓடி வந்தார்.

தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பின்னர் கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். தீ விபத்தில் வீட்டில் இருந்த துணி, பத்திரம், தானியங்கள், பணம் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.இதனிடையே தகவலறிந்த சங்கராபுரம் தாசில்தார் (பொ) இந்திரா, பாதிக்கப்பட்ட சித்ராவிடம் அரசு நிவாரண உதவி தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, வேட்டி சேலை ஆகியவற்றை வழங்கினார்.

அப்போது மண்டல துணை தாசில்தார் பசுபதி, வருவாய் ஆய்வாளர் திருமலை உடனிருந்தனர்.
Tags:    

Similar News