உள்ளூர் செய்திகள்
கைது

வீடு புகுந்து மூதாட்டிக்கு பாலியல் தொல்லை- பக்கத்து வீட்டு வாலிபர் கைது

Published On 2022-01-21 04:58 GMT   |   Update On 2022-01-21 04:58 GMT
இரவில் வீடு புகுந்து தனியாக இருந்த மூதாட்டிக்கு, வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டியை சேர்ந்தவர் பாப்பா (வயது 64). இவரது கணவர் குருவையா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது 2 மகள்கள் மற்றும் மகன் திருமணமாகி இருக்கின்றனர். இதனால் பாப்பா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு பாப்பா தனது வீட்டில் தனியாக படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த மணிகண்டன் (32) என்ற வாலிபர் பாப்பாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாப்பா கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து வாலிபர் மணிகண்டன் வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து அதன் பின் பகுதியால் பாப்பாவை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்பு நடந்த சம்பவத்தை அக்கம் பக்கத்தினரிடம் பாப்பா தெரிவித்தார்.

இதையடுத்து தாக்குதலில் காயம் அடைந்த பாப்பாவை அக்கம் பக்கத்தினர் வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வாலிபர் மணிகண்டன் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றது மற்றும் தாக்கியது குறித்து கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் பாப்பா புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்பு வாலிபர் மணிகண்டனை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி, வீட்டினுள் அத்துமீறி நுழைதல், அபாயகரமான ஆயுதத்தால் தாக்குதல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இரவில் வீடு புகுந்து தனியாக இருந்த மூதாட்டிக்கு, வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News