செய்திகள்
இந்தியாவில் தினமும் 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன -மத்திய அரசு தகவல்
இந்தியாவில் தினமும் 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பாக மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அளித்த பதில் வருமாறு:-
நாடு முழுவதும் தினமும் 25 ஆயிரம் டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. அவற்றில் 40 சதவீத கழிவுகள் சேகரிக்கப்படாமல், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன.
வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்கள் துறையில், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பிளாஸ்டிக்கின் தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இது மறைமுகமாக பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மைக்கு சவாலாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.