செய்திகள்
கர்ப்பமாக்கி ஏமாற்றியதால் விஷம் குடித்த ஆசிரியை - காதலனிடம் போலீசார் விசாரணை
காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பார்த்திபன் மீது சித்ரா புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கிராமப்பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 23, பெயர் மாற்றப்பட்டுள்ளது ). ஆசிரியையான இவரும் இவரது உறவினரான கொடுவாய் எல்லப்பாளையம்புதூரை சேர்ந்த பார்த்திபன் (26) என்பவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சென்று வந்ததுடன் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இதில் சித்ரா கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து பார்த்திபனிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார்.
அதற்கு பார்த்திபன் மறுத்துவிட்டு, மாத்திரை போட்டு கலைத்து விடு என்றும், வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ரா, பெற்றோர்களிடம் நடந்தவற்றைக் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
பெற்றோர்கள் இதுகுறித்து பார்த்திபனிடம் கேட்டபோது, தான் அப்படியெல்லாம் நடக்கவில்லை என கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 15-ந்தேதி, பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பார்த்திபன் மீது சித்ரா புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
புகாரை பெற்ற மகளிர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் வேதனையடைந்த சித்ரா பெற்றோருடன் மகளிர் போலீஸ் நிலையம் சென்றுள்ளார். அங்கு வழக்கை பற்றி அவரது பெற்றோர்கள் போலீசாரிடம் விசாரித்து கொண்டிருக்கையில் திடீரென சித்ரா மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த போது விஷம் குடித்தது தெரியவந்தது.
இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து பார்த்திபனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.