செய்திகள்
எடியூரப்பா

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா நாளை டெல்லி பயணம்

Published On 2020-09-16 02:01 GMT   |   Update On 2020-09-16 02:01 GMT
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி எடியூரப்பா நாளை (வியாழக்கிழமை) டெல்லி புறப்படுகிறார்.
பெங்களூரு :

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி எடியூரப்பா நாளை (வியாழக்கிழமை) டெல்லி புறப்படுகிறார். கலபுரகியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படும் அவர், அங்கு 3 நாட்கள் தங்க உள்ளார்.

பல்வேறு துறைகளின் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து, நிலுவையில் உள்ள கர்நாடக திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு கேட்க திட்டமிட்டுள்ளார். மேலும் 18-ந் தேதி கர்நாடக பவன் கட்டுமான பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

அதன் பிறகு அவர் பா.ஜனதா மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேச உள்ளார். அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து மந்திரிசபை விஸ்தரிப்புக்கு ஒப்புதல் பெறுவார் என்று கூறப்படுகிறது. 19-ந் தேதி தனது பயணத்தை முடித்துக் கொண்டு எடியூரப்பா கர்நாடகம் திரும்புகிறார். எடியூரப்பாவின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News