செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் உத்தரவு

Published On 2020-09-13 03:19 GMT   |   Update On 2020-09-13 03:19 GMT
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நெல்லை மாவட்டம் கரைச்சுத்துப்புதூரைச் சேர்ந்த குரூஸ் காட்வின், பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் சேர்ந்தமங்கலத்தை சேர்ந்த சிறுவன் குபேரன் எதிர்பாராதவிதமாக மின் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் தர்ஷினி, ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். சோலூரை சேர்ந்த சோபனா வீட்டில் ஏற்பட்ட மின் விபத்தில் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்கழநீர் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஜெய்பிரசாந்த், குணால் இருவரும் குளத்தில் மூழ்குவதை அறிந்த ஷீலா, அவர்களை காப்பாற்ற முற்பட்ட போது, 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் துண்டல்கழனி சித்ரா, சத்யா, பூர்ணிமா, கலையரசி ஆகிய 4 பேர் ஏரியில் துணி துவைக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் தெரணி முருகேசன் கிணறு வெட்டும்போது மண் சரிந்து உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் பைங்குளம் தேவராஜ், அம்சி குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இப்படி பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News