செய்திகள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்

ஐதராபாத் அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்

Published On 2021-05-02 14:22 GMT   |   Update On 2021-05-02 14:22 GMT
ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி:

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 28-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். 

ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 12 ரன்களுடன் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆகி நடையை கட்டினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இதில் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் 4 பவுண்டரிகளையும், 2 சிக்சர்களையும் பறக்கவிட்டார். 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில், விஜய் சங்கரின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி, சஞ்சு சாம்சன் தனது அரைசதத்தை தவற விட்டார். 

மறுமுனையில் அதிரடி காட்டிய ஜாஸ் பட்லர், 56 பந்துகளில் இன்று தனது முதல் ஐ.பி.எல். சதத்தை பதிவு செய்தார். நிலைத்து நின்று ஆடிய அவர், ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். மொத்தம் 64 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 124 ரன்கள் குவித்த ஜாஸ் பட்லர், 19-வது ஓவரில் சந்தீப் சர்மா வீசிய பந்தில் பவுல்ட் ஆனார். 

இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. இதையடுத்து 221 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட துவங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மனீஷ் பாண்டே மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர்.

மனீஷ் பாண்டே 20 பந்துகளில், 3 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில், பவுல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்த விக்கெட்டுக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். மறுமுனையில் ஜானி பேர்ஸ்டோ 4 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 30 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதையடுத்து கேன் வில்லியம்சன் 20 ரன்களிலும், விஜய் சங்கர் 8 ரன்களிலும், கேதர் ஜாதவ் 19 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அணியின் ரன் ரேட் கணிசமாக குறைந்தது. அடுத்து வந்தவர்களும் நிலைத்து நின்று ஆடாததால், ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக முஸ்தபிஜுர் ரஹ்மான் மற்றும் கிறிஸ் மோரிஸ் தலா 3 விக்கெட்டுகளும், கார்த்திக் தியாகி மற்றும் ராகுல் தெவாட்டியா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News