பொள்ளாச்சி அருகே சிறுமிகளை கடத்தி கற்பழித்த 2 வாலிபர்கள் கைது
பொள்ளாச்சி:
ஆனைமலையை சேர்ந்த இரண்டு சிறுமிகள் பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
அந்த நிறுவனத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த சின்னத்துரை(30), சரவணகுமார் (26) ஆகியோரும் வேலை பார்த்தனர். சின்னத்துரையும், சரவணகுமாரும் அந்த 2 சிறுமிகளிடமும் நெருங்கி பழகி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 சிறுமிகளும் மாயமாகினர். இதுகுறித்து, சிறுமிகளின் பெற்றோர் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
புகாரையடுத்து, ஆனைமலை போலீசார் நடத்திய விசாரணையில் 2 சிறுமிகளையும் சரவணகுமார் மற்றும் சின்னத்துரை ஆகியோர் காதலிப்பதாக கூறி பொள்ளாச்சி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வழக்கு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரை, சரவணகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.