செய்திகள்
பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் டி.மோகன் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர்கள் ஆய்வு

Published On 2021-09-16 12:58 GMT   |   Update On 2021-09-16 12:58 GMT
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
விக்கிரவாண்டி:

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் டி.மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான அறை, வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்புக்கட்டை வசதி, வாக்குகள் எண்ணும் இடம், தடையில்லா மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி, தேர்தல் பார்வையாளர்கள் அறை, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, இணையதள மற்றும் கணினி வசதியுடன் கூடிய ஊடக மைய அறை, மருத்துவக்குழுவினருடன் மருத்துவ அறை, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இதனை தொடர்ந்து கோலியனூர் மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதையும், வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டார். பின்னர் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட குடுமியான்குப்பம், வளவனூர் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையத்தையும், பார்வையிட்ட அவர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன் ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல் விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் வாக்கு எண்ணும் மையத்திலும் கலெக்டர் டி.மோகன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது தாசில்தார் தமிழ்ச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், குலோத்துங்கன், சர்க்கரை ஆலை துணை தலைவர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குபட்ட வாக்கு எண்ணிக்கை மையமான சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது செயற்பொறியாளர் செல்வக்குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, சுமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஒன்றிய பொறியாளர்கள் தனபால், ராமு, பள்ளி தலைமை ஆசிரியர் பழனியாப்பிள்ளை உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News