செய்திகள்
காரிமங்கலம் பேரூராட்சியில் சீராக குடிநீர் வழங்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
காரிமங்கலம் பேரூராட்சியில் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மற்றும் தென்பெண்ணை ஆற்று பகுதியில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் சீரான முறையில் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. அக்ரஹாரம், கடைவீதி, மந்தை வீதி, பாலக்கோடு ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீரான முறையில் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து செயல் அலுவலர் (பொறுப்பு) டார்த்தியிடம் கேட்டபோது குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் மோட்டார் பழுது ஆகியவற்றால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் விரைவில் சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் சீரான முறையில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.