நெல்லை அருகே கப்பல் சூப்பர்வைசரிடம் 6½ பவுன் நகை பறிப்பு
நெல்லை:
திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் வன்னியராஜான் (வயது32).
இவர் மும்பையில் கப்பல் நிறுவனம் ஒன்றில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
இவர் முன்னீர்பள்ளம் அருகே உள்ள வடுவூர் பட்டியில் தனது மாமனார் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று மாலை அங்கிருந்து மெஞ்ஞானபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். திடியூர் அணைக்கட்டு பகுதியில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் வன்னியராஜனை வழி மறித்தனர். பின்னர் அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த 2 மோதிரம், 2 செயின் உள்ளிட்டவற்றை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து வன்னிய ராஜன் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.
மர்ம நபர்கள் பறித்து சென்ற 6½ பவுன் நகையின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.