செய்திகள்
பணம் தருவோரை புகைப்படம் எடுத்து அனுப்பினால் உங்கள் வீட்டுக்கு வருவேன்- கமல் பேச்சு
ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் கிரிமினல் மட்டுமல்ல, மக்கள் வாழ்க்கையை 5 ஆண்டுகள் களவாட வந்தவர்கள். தேர்தலுக்கு பணம் கொடுத்து, உங்களை குத்தகைக்கு எடுத்துக் கொள்கின்றனர்.
கோவை சிங்காநல்லூர், கள்ளிமடை பகுதியில் கமல்ஹாசன் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் கிரிமினல் மட்டுமல்ல, மக்கள் வாழ்க்கையை 5 ஆண்டுகள் களவாட வந்தவர்கள். தேர்தலுக்கு பணம் கொடுத்து, உங்களை குத்தகைக்கு எடுத்துக் கொள்கின்றனர்.
நீண்ட கால விளைவை எண்ணி மக்கள் பணத்தை மறுக்க வேண்டும். அப்படி மறுத்தால் சரித்திரத்தில் பேசப்படும். நான் ஜனநாயகத்தை தோளில் சுமப்பவன். பணம் தரும் கட்சிகள் பண நாயகத்தை சுமப்பவர்கள். தமிழகத்தை சீரமைக்க மக்களின் பங்களிப்பு வேண்டும்.
பணம் கொடுக்க வருவோர் முகத்தை தெளிவாக தெரியும்படி போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி வையுங்கள். அவ்வாறு போட்டோ அனுப்புவோர் வீட்டுக்கு நான் காபி குடிக்க வருவேன். நேர்மையாக இருக்க கூடிய வாக்காளர்கள் என் சொந்தங்கள். உங்கள் மரியாதை காப்பாற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.