பொது மருத்துவம்
நீராவி குளியல்

நீராவி குளியல் உடலுக்கு தரும் தீமைகள்

Published On 2021-12-15 04:29 GMT   |   Update On 2021-12-15 09:00 GMT
நீராவி குளியல் உடலுக்கு சில நன்மைகளை தந்தாலும் அதே அளவுக்கு தீமைகளையும் எதிர்கொள்ள நேரிடும். நீராவி குளியல் முறையை அதிகம் பயன்படுத்தும்போது அனுபவிக்கும் உடல் நல பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.
குளிர்காலத்தில் நிலவும் குளிர்ச்சியான காலநிலை நிறைய பேருக்கு ஒத்துக்கொள்ளாது. உடல் குளிர்ச்சி அடைவதை தடுத்து வெப்ப நிலையை தக்கவைப்பதற்கு முயற்சிப்பார்கள். உடலில் இருக்கும் நச்சு கழிவுகளை வெளியேற்றி சருமத்திற்கு அழகு சேர்க்கவும், இளமையை தக்க வைக்கவும் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் விருப்ப தேர்வாக நீராவி குளியல் அமைந்திருக்கிறது.

மெட்ரோ நகரங்களில் நீராவி குளியல் நிலையங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. அந்த அறைக்குள் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பரவி இருக்கும். பனிப் புகையும் வெளிப்படும். இந்த குளியல் முறை மூலம் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும். அதே அளவுக்கு தீமைகளையும் எதிர்கொள்ள நேரிடும். நீராவி குளியல் முறையை அதிகம் பயன்படுத்தும்போது அனுபவிக்கும் உடல் நல பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

உடல் வெப்பநிலை அதிகரிக்கும்: நீராவி குளியல் உண்மையில் உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்து விடும். அளவுக்கு அதிகமாக வெப்பம் வெளிப்படும்போது உடலுக்கு வசதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்காது. தசை பலவீனம் அடையக்கூடும். தசை வலியும் உண்டாகும். அளவுக்கு அதிகமாக வியர்வையும் வெளிப்படலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டாலோ, உடல் உஷ்ணம் அடைந்தாலோ, அசவுகரியமாக உணர்ந்தாலோ நீராவி அறையை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்: நீராவி அறையில் நிலவும் வெப்பநிலை இதயத் துடிப்பை அதிகரிக்க செய்யலாம். அப்படி 10 நிமிடங்களுக்குள் இதயத்துடிப்பு அதிகரித்தால் வாஸ்குலர் செயல்பாடுகளில் அதன் தாக்கம் வெளிப்படும். வழக்கத்தை விட ரத்த ஓட்டம் அதிகரிக்கக் கூடும். ரத்த அழுத்தமும் உண்டாகக்கூடும். ரத்த அழுத்தம் அபரிமிதமாக அதிகரித்தால் இதய நோய் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

கிருமிகள் அதிகரிக்கக்கூடும்: நீராவி குளியல் அறைக்குள் நிலவும் சூடான சூழல் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைவதற்கு வித்திடும். இது பாக்டீரியா தொற்று மற்றும் வைரஸ் தொற்றுகளை பரப்பும் வாய்ப்பை உருவாக்கும். கொரோனா வைரஸ் முடிவுக்கு வராத சூழலில் நீராவி குளியல் நிலைமையை மோசமாக்கக்கூடும். நீராவி குளியல் அறை சுத்தமாக பராமரிக்கப்படாவிட்டால் கிருமிகள் உடலுக்குள் நுழையலாம். ஏனெனில் வைரஸ் கிருமிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு இந்த வகையான சூழல்தான் தேவை. எனவே நீராவி குளியலின்போது உடல் தூய்மையை பராமரிப்பது அவசியமானது. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

நாள்பட்ட நோய் பாதிப்பை உண்டாக்கும்: தொடர்ந்து நீராவி குளியல் எடுத்துக்கொள்வது நாள்பட்ட நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். ஏனென்றால், பைப்ரோமியால்ஜியா போன்ற நோய்கள் இந்த வெப்பநிலையில் பாதிப்பை உண்டாக்கக்கூடியவை. ஆஸ்துமா, தொடர் இருமல் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு பாதிப்பை அதிகரிக்கக்கூடும். சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகலாம். அதனால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் நீராவி குளியல் மேற்கொள்ள வேண்டும்.

நீரிழப்புக்கு வித்திடும்: நீராவி குளியல் எடுப்பதன் மூலமும் நீரிழப்பு ஏற்படலாம். ஏனெனில் உடலுக்கு தேவையான வெப்பநிலையை விட வெப்பம் அதிகம் உமிழப்படும்போது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும். அதன் காரணமாக நீரிழப்பு ஏற்படும். நீராவி குளியல் எடுக்கும்போது சிலருக்கு உடல் சோர்வு, தலைசுற்றல் மற்றும் உதடு உலர்வடைதல் போன்ற பாதிப்புகள் நேரும். இதனை தடுக்க நீராவி குளியலுக்கு பிறகு உடலில் குளிர்ச்சியான சூழலை தக்கவைக்க வேண்டும். குளியல்தான் அதற்கு தீர்வாகும். ஆனால் குளிக்கும் போது திடீரென உடலில் வெப்ப நிலை மாறுபடும் . அதனால் நோய் பாதிப்புகள் உண்டாகக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொரோனா அச்சுறுத்தல்: கொரோனா அச்சுறுத்தல் தொடரும் இந்த சமயத்தில் நீராவி குளியல் மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், கொரோனா வைரஸ் கடுமையான வெப்பநிலையிலும் ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. நீராவி குளியல் அறையானது கொரோனா வைரஸ் அங்கு நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கு சிறந்த இடமாகும். எனவே நீராவி அறையில் சிறிய அளவில் கொரோனா வைரஸ் படிந்திருந்தாலும், அதனை பயன்படுத்துபவர்கள் அனைவரையும் அது பாதிக்கலாம். எனவே கொரோனா ஆபத்து குறையும் வரை நீராவி குளியலில் இருந்து விலகி இருப்பது நல்லது.
Tags:    

Similar News