செய்திகள்
கொலை

சொத்து பிரச்சனையில் நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை கொன்ற மகன்

Published On 2020-11-22 03:34 GMT   |   Update On 2020-11-22 03:34 GMT
மதுரையில் சொத்து பிரச்சனையில் நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை அவரது மகனே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

மதுரை பெருங்குடியை அடுத்த வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் மொட்டையன்(வயது 56). இவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு முத்துமுனியாண்டி, முத்துமணிராஜா என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் மொட்டையன் நேற்று அதிகாலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த பெருங்குடி போலீசார் மொட்டையன் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மொட்டையன் கடந்த சில நாட்களுக்கு முன் தனது சொத்துக்களை இளைய மகன் முத்துமணிராஜாவிற்கு எழுதி வைத்து விட்டாராம். இதனால் கோபமடைந்த மூத்த மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்தது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த அருள், செல்வம், சிலைமான் எல்.கே.டி நகரை சேர்ந்த ராமர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முத்துமுனியாண்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News