செய்திகள்
முககவசம்

விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம்

Published On 2021-04-20 13:59 GMT   |   Update On 2021-04-20 13:59 GMT
விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம்:

கொரோனா என்கிற கொடிய அரக்கனின் கோரதாண்டவம் இன்னும் முடிந்தபாடில்லை. தற்போது 2-வது அலையாக உருவெடுத்து நாட்டுமக்களையே கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது கொலைகார கொரோனா.

தமிழகத்திலும் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால், இதை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. அதோடு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு முககவசம் அணியாமல் வரும் பயணிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட பாதுகாப்பு படை முதுநிலை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நடந்த இந்த பணியில், பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை சோதனை செய்த பின்னரே ரெயில்நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதோடு முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வுகளை போலீசார் ஒலிபெருக்கி மூலமாக ஏற்படுத்தினர்.

விழுப்புரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் இருப்பு பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன சுந்தர் தலைமையில் இரு குழுக்களாக பிரிந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களில் முககவசம் அணியாமல் வந்ததாக 52 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News