செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூரில் தொழில்துறையினரின் பணபரிவர்த்தனைகள் கண்காணிப்பு - தேர்தல் அதிகாரிகள் முடிவு

Published On 2021-03-01 22:42 GMT   |   Update On 2021-03-02 16:04 GMT
திருப்பூரில் தொழில்துறையினரின் பணபரிவர்த்தனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர்:

டாலர் சிட்டி என்றழைக்கப்படும் திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இங்கு வேலை செய்கிற தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படும்.

இதுபோல் ஆர்டர்கள் கொடுக்கிற வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளும் ஆடை தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுப்பார்கள். இதுபோல் தொழில்துறையினரும் பல்வேறு மூலப்பொருட்கள் வாங்குவதற்காக கைகளில் அதிகளவு பணம் வைத்திருப்பார்கள். பணப்புழக்கம் அதிகம் நிறைந்த பகுதியாக திருப்பூர் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூரில் உள்ள தொழில்துறையினர் மற்றும் நிறுவனங்களின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பணபரிவர்த்தனை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.

அரசியல் கட்சியை சார்ந்த பலரும் நிறுவனங்கள் வைத்திருப்பதால், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பண பரிவர்த்தனை நடைபெறும் வாய்ப்புள்ளது என்பதால், தேர்தல் ஆணையம் இந்த மாதிரியான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

திருப்பூர் மாநகரத்தில் உள்ள பனியன் நிறுவனங்கள் வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்கள். தற்போது ரூ.50 ஆயிரத்து மேல் பணம் கொண்டு சென்றால், ஆவணம் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும் என்பதால், பலரும் ஆன்லைன் பணபரிவர்த்தனையில் ஈடுபட தொடங்கியுள்ளார்கள்.அந்த வகையில் திருப்பூர் தொழில்துறையினரின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பணபரிவர்த்தனையை கண்காணித்து வருகிறோம். சந்தேகத்திற்கு இடமாக பணபரிவர்த்தனை இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். உரிய ஆவணங்கள் இருந்தால், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News