செய்திகள்
திருப்பத்தூர் அருகே வீட்டில் பதுக்கிய 21½ கிலோ கஞ்சா பறிமுதல்
திருப்பத்தூர் அருகே போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 21½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேலூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள பொம்மிகுப்பம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக வேலூர் போதைப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஏ.டி.ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காலை பொம்மிகுப்பம் கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சீனிவாசன் (வயது 37) என்பவரது வீட்டில் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 21½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அனக்கபள்ளி பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி பஸ்கள் மூலம் கடத்தி வந்து அவர் விற்பனைக்கு வீட்டில் பதுக்கி வைத்திருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.