செய்திகள்
தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் மகளிர் சுயஉதவிக் குழுவினர்
ரூர்பன் திட்டத்தின் கீழ் அவிநாசி ஆட்டையாம்பாளையம், நம்பியாம்பாளையம், தெக்கலூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அங்காடி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் வகையில் மகளிர் திட்டம் மூலம் பல்வேறு தொழில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசின் ‘ரூர்பன்’ திட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.
பனியன் ஜாப் ஒர்க் நிறுவனங்கள், சமையல் பாத்திரக்கடை, சுய உதவிக்குழுவினரின் தயாரிப்பு பொருட்களை விற்க அங்காடி அமைத்தல், பாக்கு மட்டை, துணிப்பை தயாரிப்பு என பல்வேறு பொருட்களை தயாரிக்க பயிற்சியும், நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
ஆனால் பல இடங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினரால் இப்பணிகளை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. உதாரணமாக ‘ரூர்பன்’ திட்டத்தின் கீழ் அவிநாசி ஆட்டையாம்பாளையம், நம்பியாம்பாளையம், தெக்கலூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அங்காடி வழங்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு நாளில் மட்டுமே அவை திறந்து வைக்கப்படுகின்றன. பெரும்பாலான நாட்களில் பூட்டியே கிடக்கிறது. பல லட்சம் ரூபாய் முதலீட்டில் பனியன் நிறுவனம், பாக்கு மட்டை தயாரிப்பு நிறுவனங்கள் நிறுவ உதவி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கான முழு முதலீட்டு தொகையும் விடுவிக்கப்படாததால் குழுவினரே தங்கள் சொந்த செலவில் முதலீடு சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரம் மகளிர் சுய உதவிக் குழுவினரின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல், பெரும்பாலான மகளிர் குழுவினர் திணறுகின்றனர்.
இதுகுறித்து மகளிர் திட்டத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில்:
‘தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டாலும் சிலர் சிறப்பாக பயன்படுத்துகின்றனர். சிலர் பயன்படுத்திக் கொள்வதில்லை. மகளிர் குழுவினரின் குடும்பத்தினர் கூட அவர்களின் தொழில் முன்னேற்றத்துக்கு உதவலாம்‘ என்றனர்.